தமிழ்நாட்டில் 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பச் செயல்முறை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியாக ஜூலை 23-ஆம் தேதி மாலை 5.00 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 29-ஆம் தேதி முதல் விண்ணப்பச் சாளரம் திறக்கப்பட்டு, மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது வரை சுமார் 41,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவத் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பச் சமர்ப்பிப்பிற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தேர்வுக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களைப் பரிசீலித்தல், தகுதியற்ற விண்ணப்பதாரர்களைக் கண்டறிந்து பட்டியலிடுதல் மற்றும் அவர்கள் முறையீடு செய்ய ஏதுவாக ‘குறைதீர்ப்பு சாளரம்’ ஒன்றைத் திறக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், இந்தத் தேதி மாற்றப்படாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் (DGHS) கீழ் நடைபெறவுள்ள அகில இந்திய அளவிலான கலந்தாய்வு அட்டவணையுடன், தமிழகத்தின் கலந்தாய்வு கால அட்டவணையை ஒருங்கிணைக்க வேண்டியதும் அவசியம். எனவே, மாணவர்களின் நலன் கருதி, கடைசி நேர நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் தகுதியுள்ள மாணவர்கள் உடனடியாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு தேர்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது.
