கர்நாடக மாநிலம் மேகேதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டைக் கண்டித்து, கர்நாடக வாட்டாள் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் இன்று தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கண்டனப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தன.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநிலங்களுக்கும் இடையேயான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் அத்திப்பள்ளி எல்லைக்குள் செல்ல அனுமதிக்கப்படாமல், ஓசூர் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றன.
இதனால் பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளுக்கு வேலை, தொழில் மற்றும் அவசர தேவைகளுக்காகச் செல்லவிருந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். போராட்டம் நிறைவடைந்த பிறகே வழக்கமான பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அத்திப்பள்ளி மற்றும் ஜூஜூவாடி எல்லைப் பகுதிகளில் இரு மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எல்லையை கடக்கும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
