திருச்சி அரியமங்கலத்தில் மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற தவெக எம்.எல்.ஏ அதிரடி திட்டத்தை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் சேகரமாகும் குப்பைகளை அகற்ற டெண்டர் மூலம் 40 கோடி ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை , 30 கோடி ரூபாய் செலவில் குவாரியில் கொட்டினால் நிரந்தர தீர்வு காணலாம் என அதிகாரிகளுக்கு திருவெறும்பூர் தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை நிரந்தரமாக அகற்றுவது குறித்து திருவெறும்பூர் தவெக எம் எல் ஏ நவல்பட்டு விஜி ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் குப்பை கிடங்கு 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 600 டன் குப்பைகள் வந்து இங்கு கொட்டப்படுகிறது.
மலைபோல் குவிந்திருக்கும் இந்த குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் மாசு, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளால் பொதுமக்கள் பெரும் அவதியுற்று வந்தனர்.
இந்நிலையில் இந்த குப்பை கிடங்கை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே பல போராட்டங்களில் ஈடுபட்டதுடன் அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.
மேலும் இங்கு பயோ மைனிங் திட்டத்தின் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வந்தாலும் மீண்டும் மீண்டும் குப்பைகள் குவிந்த வண்ணமே உள்ளது .

இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும், குப்பைக்கிடங்கை முற்றிலுமாக இங்கிருந்து அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள், குடியிருப்புவாசிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் திருவெறும்பூர் எம்எல்ஏ நவல்பட்டு விஜி, அரியமங்கலம் குப்பை கிடங்கில் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பயோ மைனிங் திட்டத்தின் மூலம் ரூ. 40 கோடி டெண்டர் விடப்பட்டு குப்பைகளை அகற்றுவதற்கு பதிலாக, துவாக்குடி பகுதியில் கைவிடப்பட்ட 1000 அடி ஆழமுள்ள குவாரிகளில் (பாறை குழிகளில்) குப்பைகளை கொட்டி நிரப்பலாம் எனவும்
இதன் மூலம் குவாரிகளும் மூடப்படும், குப்பைகளும் குப்பை கிடங்கில் தேங்காமல் இருக்கும். எனவும் அறிவுறுத்தினார்.
குப்பைகளை நேரடியாக குவாரியில் கொட்டுவதால் ரு.30 கோடி மட்டுமே செலவாகும் எனவும், இதற்கு மாநகராட்சி ஆணையர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.
