ருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான (NEET-UG) மறு தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடு முழுவதும் தொடங்கியது. இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களிலும் நடைபெறும் இந்தத் தேர்வை சுமார் 22.79 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

தேசிய தேர்வு முகமை (NTA) ஏற்பாடு செய்துள்ள இந்தத் தேர்வுக்காக நாடு முழுவதும் 5,440 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க நாடு முழுவதும் 1.38 லட்சத்திற்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் மற்றும் 51,311 சிக்னல் ஜாமர்கள் பயன்படுத்தப்பட்டு, டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரலையாகக் கண்காணிக்கப்பட்டது. வினாத்தாள்கள் அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன், ஜிபிஎஸ் வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆள்மாறாட்டத்தைத் தடுக்க டிஜிட்டல் கைரேகை மற்றும் முக அங்கீகாரம் (Facial Recognition) உள்ளிட்ட தீவிர பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறைகள் கட்டாயமாக்கப்பட்டன.கடுமையான ஆடைக் கட்டுப்பாடு மற்றும் தீவிர சோதனைக்குப் பிறகே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்

தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மட்டுமே மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 1.30 மணிக்குப் பிறகு வந்த மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

1.42 லட்சம் மாணவர்கள்

இந்தியாவிலேயே அதிகப்படியான மாணவர்கள் நீட் தேர்வு எழுதும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இம்முறை தமிழகத்தில் மட்டும் சுமார் 1.42 லட்சம் மாணவர்கள் இந்த மறு தேர்வை எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 31 மாவட்டங்களில் 307 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தலைநகர் சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 43 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாலை முதலே தேர்வு மையங்களுக்கு வருகை தந்தனர். மாணவர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ உதவி மற்றும் போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.நாடு முழுவதும் தேர்வு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாகவும், இதுவரை பெரிய அளவிலான புகார்கள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version