பஞ்சபூதத் தலங்களில் ‘நிலம்’ தத்துவத்திற்கு உரியதாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில், புதிதாகச் செய்யப்பட்ட தங்கத் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை மூலமாக சுமார் ரூ.30 கோடி மதிப்பில் புதிய தங்கத்தேர் வடிவமைக்கப்பட்டு, ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முறையாக 25 அடி உயரம், 13 அடி நீளம் மற்றும் 10 அடி அகலத்தில், அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் இந்த தங்கத்தேர் மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலாம் ஆண்டு தங்கத்தேரோட்ட விழாவில், ஏலவார்குழலி அம்மையாருடன் சோமாஸ்கந்தர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் முதன்முறையாக புதிய தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்த விழாவில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் துவக்கி வைத்தார்.

இந்தநிகழ்வில் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், மாவட்ட ஆட்சியர் சினேகா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் ஸ்ரீ சங்கர விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தேரோட்டத்திற்கு முன்னதாக தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்களின் இசை கச்சேரி, சிவனடியார்களின் சிவ வாத்தியங்கள் முழக்கம், திருப்பூர் காவடி குழுவினரின் ஆட்டம், கொங்கு மண்டல கும்மிப்பாட்டு, சிலம்பாட்டம் மற்றும் சிறப்பு வாணவேடிக்கைகள் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகரின் ராஜவீதிகளில் உலா வந்த தங்கத்தேரை ஏராளமான பக்தர்கள் “அரோகரா” முழக்கத்துடன் வடம் பிடித்து இழுத்து, ஏலவார்குழலி உடனாய ஸ்ரீ ஏகாம்பரநாதரை மனமுருகி வழிபட்டுச் சென்றனர்.
