தகுதியான எந்த வாக்காளர் பெயரும் விடுபடாது!- மாநில தலைமை தேர்தல் அதிகாரி
எந்த காரணத்தை முன்னிட்டும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (SIR) காலநீட்டிப்பு வழங்கப்படாது என்றும் திட்டமிட்டபடி டிசம்பர் 4ம் தேதி பணிகள் நிறைவு பெறும் என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குச்சாவடி அலுவலர்கள் (BLO) வழங்கிய படிவங்களை, பூர்த்தி செய்து விரைவாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் பட்டியலில் உள்ளதாகவும், அதில், 6.16 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டு உள்ளதகாவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். டிசம்பர் 4ம் தேதி வரை மட்டுமே SIR பணிகள் நடைபெறும் என்றும் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெற்று, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முகவரி மாறிய வாக்காளர்கள் அதே தொகுதிக்குள் இருந்தால், அவர்களை கண்டறிந்து கணக்கெடுப்பு படிவம் வழங்கி வருவதாகவும், வேறு தொகுதிக்கு மாறி இருந்தால், படிவம் 8-ஐ கொடுத்து, அவர்கள் பட்டியலில் சேருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு கொடுத்த அனைவரது பெயரும் சரிபார்க்கப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் என்றும் அவர் உறுதி அளித்தார். தகுதியான எந்த வாக்காளர் பெயரும், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தகுதியான வாக்காளர் பெயர் நீக்கப்பட்டு இருந்தால், அதற்கு வாக்குச்சாவடி வாரியாக விளக்கம் அளிக்கப்படும் என்றார்.
எந்த கட்சிக்கும் ஆதரவாக, வாக்குச்சாவடி அலுவலர்கள் செயல்படவில்லை என்று தெரிவித்த அவர், நடுநிலையுடன் பணியாற்றி வருவதாக கூறினார். வெளிமாநிலத்தை சேர்ந்த 869 பேர், தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு உரிய படிவங்களை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்பட 83,256 பேர், தன்னார்வலர்கள் 33,000 பேர் SIR பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அரசியல் கட்சிகளின் 2.45 லட்சம் முகவர்கள் SIR பணிகளை கண்காணித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
