தமிழக சட்டமன்ற தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரபல தொழிலதிபர் ‘லாட்டரி கிங்’ மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ், சமீபத்தில் இந்திய ஜனநாயாகக் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவர் தவெக ஆதர்வ் அர்ஜுனாவின் மாமியார் ஆவார். இருப்பினும் அவர் இணைந்த ஒரு சில நாட்களிலேயே அவருக்கு லால்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
2026 சட்டமன்றத் தேர்தலிலேயே மிகவும் பணக்கார வேட்பாளராக அறியப்படும் இவர், தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தனக்கு மட்டும் ரூ.1,049 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரின் சொத்துக்களையும் சேர்த்தால் அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.5,863 கோடிக்கும் மேல் செல்வது ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் அதிர வைத்துள்ளது.
இந்நிலையில், லால்குடி தொகுதியின் மாந்துறை பகுதியில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸுக்கு ஆதரவாக ரூ.25,000 டோக்கனுடன் 2 ஆட்டோக்களில் கும்பல் வலம் வந்ததாகப் புகார் எழுந்துள்ளது. ஆட்டோவில் இருந்தவர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்தால் ஒரு ஓட்டுக்கு ரூ.25,000 வழங்குவதாகக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தவெகவினரும், பொதுமக்களும் பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பியோடிவிட்டனர். ஏற்கனவே “மெகா பணக்கார வேட்பாளர்” என்ற முத்திரை லீமா ரோஸ் மீது குத்தப்பட்டுள்ள நிலையில், இப்படி ஒரு டோக்கன் புகார் எழுந்துள்ளதால் தேர்தல் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

