திருச்சி தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகங்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
திருச்சி மாநகர் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் மற்றும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகங்களுக்கு இன்று மதியம் வெடிகுண்டு மிரட்டல் குறுஞ்செய்தி மெயில் மூலம் வந்துள்ளது. அந்த மெயிலில் பாஸ்போர்ட் ஆபீஸ் மற்றும் போஸ்ட் ஆபீஸ் அலுவலகங்களில் ஆர் டி எக்ஸ் பாம் வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து திருச்சி மாநகர காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் திருச்சி மாவட்ட தலைமை தபால் நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம் ஆகிய இடங்களில் தீவிரமாக சோதனை செய்தனர்.
திருச்சி மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வாளர் வேலுச்சாமி உதவி ஆய்வாளர்கள் அருளானந்தம் ரமேஷ் அன்பழகன் உள்ளிட்டோர் தலைமையில் அங்குலம் அங்குலமாக சோதனை நடைபெற்றது. பாம் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது இதில் எந்தவித வெடிப்பொருட்களும் கிடைக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிட்டத்தக்கது. இந்த வெடிகுண்டு மிரட்டலால் அவ்வப்போது பரபரப்பு ஏற்பட்டு வருவதால் காவல்துறையினர் இது சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
