திண்டுக்கல் – திருச்சி வழித்தடத்தில் அரசுப் பேருந்துகளை நேரில் இயக்காமலேயே, ஆவணங்களில் மட்டும் பேருந்துகள் இயங்கியதாகக் காட்டி, போலி பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி அரங்கேற்றப்பட்ட பெரும் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) விரிவான விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு வேடசந்தூரிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில், 3 வெவ்வேறு விதமான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டதும், ஒரே வழித்தடத்தில் 3 பேருந்துகள் இயக்கப்பட்டது போன்ற போலி பதிவுகள் உருவாக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக, அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பி.கார்த்திக் ராஜா மற்றும் இளநிலை உதவியாளர் பி.சிவராஜ் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் போக்குவரத்துக் கழகம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, இந்த மோசடி குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முருகேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி தனது உத்தரவில், இந்த விவகாரத்தில் கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்:

”ஒரே வழித்தடத்தில் போலி பதிவுகள் உருவாக்கப்பட்டு, டீசல் தொகை மற்றும் ஊழியர்களின் சம்பளத் தொகையிலும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய குற்றத்திற்குப் பின்னரும், சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் மற்றும் இளநிலை உதவியாளருக்கு மிகச் சிறிய தண்டனை வழங்கி ஒட்டுமொத்த விவகாரத்தையும் மூடி மறைத்துள்ளனர்.

இத்தகைய முறைகேடுகள் உயர் அதிகாரிகளின் கூட்டுச் சதி மற்றும் ஈடுபாடு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இந்த மோசடி தமிழ்நாட்டின் பிற வழித்தடங்களிலும் நடந்துள்ளதா என்பது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள 14 லட்சம் அரசு ஊழியர்களைக் கண்காணிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்புத் துறை, வெறும் 100 ஊழியர்களுடன் பெயரளவில் மட்டும் செயல்படுவது வருந்தத்தக்கது. ஊழல் தடுப்புத் துறைக்கு வரும் புகார்களை, மீண்டும் சம்பந்தப்பட்ட துறையின் தலைவர்களுக்கே அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இந்தக் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த போலி டிக்கெட் மோசடி மற்ற வழித்தடங்களிலும் நடந்துள்ளதா? இதில் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநருக்கு (MD) தொடர்பு உள்ளதா? என்பதைக் கண்டறிய லஞ்ச ஒழிப்புத் துறை முழுமையாக விசாரிக்க வேண்டும்” என்று நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டுள்ளார். மேலும், விசாரணையில் முறைகேடு இருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரியக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version