ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் சோக சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கார்த்திக் – சரோஜினி தம்பதியரின் 10 மாத ஆண் குழந்தை தருணுக்கு நேற்று வழக்கமான தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்ட சில மணி நேரங்களிலேயே குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை குழந்தைக்கு தீவிர வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, தருண் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த குழந்தையின் உடல் உடற்கூறு ஆய்வுக்காகப் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் அருணா விளக்கம் அளிக்கையில், கோபி பகுதியில் மொத்தம் 14 குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டதாகவும், அதில் மற்ற 13 குழந்தைகள் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, குழந்தை தருணின் இறப்புக்கான உண்மையான காரணம் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வந்த பிறகே தெரியவரும் என்றார்.
