தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் சிக்னல் கோளாறு காரணமாக, செங்கல்பட்டு – சென்னை கடற்கரை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் மற்றும் செமி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அலுவலகம் செல்வோர் மற்றும் பொதுமக்கள் கடந்த 30 நிமிடங்களுக்கும் மேலாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக சென்னை கடற்கரை நோக்கிச் செல்லும் முக்கிய ரயில் வழித்தடத்தில் இன்று காலை திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, தாம்பரம் ரயில் நிலையத்திற்குள் ரயில்கள் வர முடியாத சூழல் உருவானது.
இதன் விளைவாக, பின்னால் வந்த மின்சார ரயில்கள் மற்றும் செமி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் அடுத்தடுத்த ரயில் நிலையங்களிலேயே அவசர அவசரமாக நிறுத்தப்பட்டன.
காலை நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் என ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த ரயில்களில் பயணித்துக் கொண்டிருந்தனர்.“கடந்த அரை மணி நேரத்திற்கு மேலாக ரயில்கள் நகராமல் ஒரே இடத்தில் நிற்பதால், குறித்த நேரத்திற்கு அலுவலகங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறோம்” என பயணிகள் வேதனை தெரிவித்தனர்
பல பயணிகள் ரயில்களை விட்டு இறங்கி, மாற்று ஏற்பாடாக பேருந்து மற்றும் பிற வாகனங்களை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் ஜி.எஸ்.டி சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
சிக்னல் கோளாறு குறித்து தகவல் அறிந்தவுடன், ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோளாறைச் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரைவில் சிக்னல் சரி செய்யப்பட்டு, ரயில் போக்குவரத்து சீராகும் என ரயில்வே நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
