தமிழகத்தில் SIR படிவங்களை பதிவேற்றும் பணி நிறைவடைந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கியது. வீடு வீடாகப் படிவம் விநியோகம் செய்வது, அதனை பூர்த்தி செய்து இணையத்தில் பதிவேற்றுவது ஆகிய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் டிசம்பர் 4 ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பருவமழை உள்ளிட்ட காரணங்களால் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனை ஏற்று S.I.R படிவங்களைச் சமர்ப்பிக்கும் அவகாசம் டிசம்பர் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேலும் 3 நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி S.I.R படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் SIR படிவங்களை பதிவேற்றும் பணிகளுக்கான கால அவகாசம் முடிவடைந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். இதனிடையே நவம்பர் 4 முதல் பெறப்பட்ட SIR படிவங்களை ஆன்லைனில் பதிவேற்றும் பணிகள் இறுதிக்கட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
