தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் விறுவிறுப்பை எட்டி வருகின்றன. குறிப்பாக, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வரும் வேளையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைத் தங்கள் பக்கம் இழுக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற விசிக நிர்வாகக் குழுக் கூட்டத்தில், திமுகவிடம் 10  சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கேட்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த தவெக தரப்பு, “எங்கள் கூட்டணிக்கு வந்தால் போதிய இடங்களும், உரிய அங்கீகாரமும் வழங்கப்படும்” என்ற உத்தரவாதத்துடன் மீண்டும் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தவெக-வின் இந்தத் தூது முயற்சிகளைத் திருமாவளவன் ஆரம்பக் கட்டத்திலேயே திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது. நீண்டகாலமாக அங்கம் வகித்து வரும் திமுக கூட்டணியை விட்டு தற்போது வெளியேறினால், கட்சியின் அரசியல் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும் என அவர் கருதுவதாக விசிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொகுதிப் பங்கீட்டில் சில சிக்கல்கள் இருந்தாலும், இறுதியில் திமுக கூட்டணியில் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் மற்றும் இடங்கள் கண்டிப்பாகக் கிடைக்கும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த அதிரடி நிராகரிப்பு தவெக வட்டாரத்தில் சற்றே பின்னடைவை ஏற்படுத்தினாலும், மாற்றுத் திட்டங்கள் குறித்து அக்கட்சி ஆலோசித்து வருகிறது. அதேசமயம், விசிகவின் இந்த உறுதியான நிலைப்பாடு திமுக தலைமைக்குச் சற்றே நிம்மதியை அளித்துள்ளது. “கொள்கை ரீதியான கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை” என்பதைத் திருமாவளவன் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். வரும் நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version