பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் பரிசு பணம் அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு ரூ.3000 எதற்கு என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று (ஜன.10) சென்னையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “வாக்குக்கு பணம் கொடுப்பவர்கள் ஒரு பக்கம் இருப்பார்கள். மக்களின் வாக்கை பற்றி கவலைப்படுபவர்கள் ஒரு கூட்டமாக இருப்பார்கள். மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுகிற நாங்கள் தனித்து நிற்போம்.
கூட்டத்தில் ஒருவனாக நிற்பதற்கு வீரமும் துணிவும் தேவையில்லை. தனித்து நிற்பதற்கு தான் வீரமும் துணிவும் தேவை. வணங்குகிற சாமியைப் பற்றி கவலைப்படுகிற ஒரு கட்சி இருக்கும், மக்களின் வாக்கை எப்படி எல்லாம் பறிக்கலாம் என்று நினைக்கிற ஒரு கட்சி இருக்கும். தேர்தல் அரசியலில் சிந்திக்கிற எல்லோரும் ஒரு பக்கம் நிற்பார்கள். மக்கள் அரசியல் பற்றி சிந்திக்கிற கூட்டம் நாங்கள் தனியாக நிற்கிறோம்.
இந்த பொங்கலுக்கு ரூ.3000 எதுக்கு?. இதனால், ரூ.6,800 கோடி இழக்கிறோம் என்று கூறிய சீமான், ஏற்கனவே, மாநிலத்துக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருப்பதாக சுட்டிக்காட்டினார். இந்த தொகை இருந்தால், இந்தியாவை உலகிலேயே தலைசிறந்த நாடாக என்னால் மாற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.
