இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ள புதிய சுங்கக் கட்டண உயர்வு, ஏப்ரல் 1-ம் தேதியான இன்று முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. சுங்க கட்டண உயர்வு என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் அமல்படுத்தப்படும். அதன்படி, தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 60-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் வருடாந்திர கட்டண உயர்வு இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) இந்த அறிவிப்பின்படி, சுங்கக் கட்டணங்கள் 3% முதல் 7% வரை உயர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, கார், ஜீப் போன்ற இலகுரக வாகனங்களுக்கு ஒருமுறை கடந்து செல்ல ரூ. 5 முதல் ரூ. 10 வரையிலும், பேருந்துகள் மற்றும் லாரிகள் போன்ற கனரக வாகனங்களுக்கு அவற்றின் வகையைப் பொறுத்து ரூ. 40 முதல் ரூ. 200 வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெங்களூரு – சென்னை விரைவுச்சாலை (ஹோஸ்கோட்–KGF பகுதி), தபாஸ்பேட் – ஹோஸ்கோட் இடையிலான நகர சுற்றுச்சாலை, பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலை, கனகபுரா சாலை மற்றும் விமான நிலையச் சாலை உள்ளிட்ட முக்கிய தடங்களில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
பரனூர், ஆத்தூர், வானகரம், சூரப்பட்டு, கிருஷ்ணகிரி மற்றும் கப்பலூர் உள்ளிட்ட முக்கிய சுங்கச்சாவடிகளில் இந்த உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இது தவிர, விஐபி-க்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தனியார் கார்களுக்கான வருடாந்திர ஃபாஸ்டேக் (FASTag) பாஸ் கட்டணம் ரூ. 3,000-லிருந்து ரூ. 3,075-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் இந்த புதிய கட்டண முறை அமல்படுத்தப்பட்டதால், நெடுஞ்சாலைகளில் பயணம் செய்த வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த சுங்கக் கட்டண உயர்வு போக்குவரத்து செலவினங்களை நேரடியாக பாதிக்கும் என்பதால், லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்து செலவு அதிகரிப்பதன் காரணமாக, சந்தையில் அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு, இந்த கூடுதல் சுங்கக் கட்டணம் பெரும் சுமையாக மாறும் எனக் கருதப்படுகிறது.
