சேலம் மாவட்டம் அரியானூர் அருகே இன்று காலை அரசுப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடும் வேகத்தில் எதிர் திசையில் பாய்ந்தது. சாலையில் தாறுமாறாகச் சென்ற அந்தப் பேருந்து, எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் மற்றும் மினி ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் வாகனங்களில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த விதம் குறித்து வெளியான சிசிடிவி காட்சிகள், பார்ப்போரை பதைபதைக்க வைக்கும் வகையில் உள்ளது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக சேலம் – இளம்பிள்ளை சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பேருந்தில் பிரேக் செயலிழந்ததா அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
