சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியை விரிவாக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வருகிறார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமகவின் அன்புமணி தரப்பில் கூட்டணியை பேசி முடித்து, தொகுதி பங்கீட்டையும் நிறைவு செய்துள்ளது. அதேபோல், இன்று டிடிவி தினகரனின் அமமுகவும் தனது கூட்டணியை என்.டி.ஏ.வுடன் இணைத்துக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஒருபுறம், தேமுதிகவும் கூட்டணிக்கு வந்தால், வடமாவட்டங்களில் அதிமுக கூடுதல் வலிமைபெறும். இதனை கணக்கில் கொண்டே என்.டி.ஏ. கூட்டணி தலைவர்கள் தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், என்.டி.ஏ.கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் எங்களை அணுகவில்லை என்றும் பிரேமலதா கூறியுள்ளார்.
இந்தநிலையில், அதிமுக கூட்டணி சார்பாக அமமுகவுக்கு 15 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா தொகுதியை ஒதுக்கவேண்டும் என்று டிடிவி தினகரன் கேட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, பாபநாசம்(தஞ்சை), சோளிங்கர், சைதாப்பேட்டை, திருவாடானை, சாத்தூர், முதுகுளத்தூர், திருப்பூர், முசிறி, நாங்குநேரி, ஆண்டிபட்டி, மேலூர், காரைக்குடி, ஒட்டபிடாரம், பூந்தமல்லி உள்ளிட்ட தொகுதிகள் மீது தினகரன் விருப்பம் தெரிவித்துள்ளாராம். இவற்றில் 9 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் 2 தொகுதிகளில் அமமுக போட்டியிட்டது. அதனால் இம்முறை குறைந்தது ஒரு தொகுதி ஆவது ஒதுக்க வேண்டும் என்று கோரி இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதத்தின் கடைசி வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
