கரூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்ட நெரிசலில் 41 உயிரிழந்த நிலையில், 34 மணி நேரத்திற்கு பிறகு விஜய் தனது நீலாங்கரை வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய ஊர்களில் தனது இரண்டு கட்ட பிரசாரங்களை விஜய் முடித்திருந்தார்.
மேலும், டிசம்பர் 20, 2025 உடன் முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த சுற்றுப்பயண அட்டவணை, தற்போது 2026 பிப்ரவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை (செப். 27) தனது 3ஆம் கட்ட பயணமாக நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்து இருந்தார்.
விபத்து தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்கவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து, தனது சொந்த காரில், பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது. ஏறக்குறைய 34 மணி நேரத்திற்கு பிறகு தனது இல்லத்தை விட்டு வெளியே வருவது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்தும், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் தனது இல்லத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.