தமிழக அரசியல் களத்தில் நுழைந்த சில நாட்களிலேயே விஜய் – சங்கீதா விவகாரம் தமிழகத்தில் மிகபெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கூறி கடந்த டிசம்பர் மாதம் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சங்கீதா. அந்த வழக்கு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது என்று கூறப்பட்டது.
விஜய் மீது சங்கீதா வைத்த புகாரால் தான் அந்த விவாகரத்து வழக்கு மீது மக்களின் கவனம் திரும்பியது. ஃபேமிலி மேன் என்று பெயர் எடுத்த விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாக புகார் தெரிவித்தார் சங்கீதா. கடந்த 2023-ம் ஆண்டு முதல் விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து வாழ்வதாக வதந்திகள் பரவின. குறிப்பாக, விஜய்யின் வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மணிவிழா போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் சங்கீதா பங்கேற்காதது இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. சங்கீதா தனது குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருவதாகக் கூறப்பட்டது.
யூகங்களாக இருந்த இந்தச் செய்தி, கடந்த பிப்ரவரி 24, 2024 அன்று அதிகாரப்பூர்வமாக வெளிச்சத்திற்கு வந்தது. சங்கீதா தரப்பில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், “மன உளைச்சல் மற்றும் திருமணத்தைத் மீறிய உறவு” ஆகியவை முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், இரு தரப்புக்கும் நெருக்கமானவர்கள் மூலம் பலமுறை சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. ஒரு கட்டத்தில், சங்கீதா தரப்பில் ₹250 கோடி வரை ஜீவனாம்சம் கோரப்பட்டதாகவும், விஜய் தரப்பில் ₹35 கோடி முதல் ₹40 கோடி வரை வழங்க முன்வந்ததாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், விவாகரத்து வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் தான் வசிக்க அனுமதி கோரி சங்கீதா மற்றுமொரு இடைக்கால மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.
இந்தநிலையில் இன்று நடைபெறவுள்ள விசாரணையின் போது, இரு தரப்பு வாதங்களும் கேட்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அரசியல் பயணத்தில் தீவிரமாக இருக்கும் விஜய், இந்த வழக்கிற்காக நேரில் ஆஜராவாரா அல்லது வழக்கறிஞர் மூலம் தனது தரப்பை முன்வைப்பாரா என்பது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது, ஆனால், இன்று இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல் வேறொரு தேதி கேட்டதால் ஜூன் மாதத்திற்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 15-ம் தேதி, விஜய் காணொலி வாயிலாக ஆஜராக செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சங்கீதாவும் காணொலி வாயிலாக ஆஜராக அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
