தமிழக அரசியல் களத்தில் முதல்முறையாகத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகம், தனது வேட்பாளர் தேர்வில் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்டங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 115 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை அலுவலகம் மீண்டும் ஒருமுறை நேரில் அழைத்துள்ளது. இந்தத் திடீர் அழைப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேட்பாளர்களின் தகுதிகள் மற்றும் ஆவணங்களை இறுதிச் சரிபார்ப்பு (Re-check) செய்வதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேட்புமனுத் தாக்கலின் போது ஏற்படும் மிகச்சிறிய பிழைகளை கூட காரணமாக வைத்து, ஆளும் தரப்போ அல்லது தேர்தல் ஆணையமோ மனுக்களை நிராகரித்துவிடக் கூடாது என்பதில் விஜய் மிகுந்த உறுதியுடன் இருக்கிறார். இதற்காக, வேட்புமனுத் தாக்கலுக்குத் தேவையான சொத்து விவரங்கள், குற்றப் பின்னணி குறித்த பிரமாணப் பத்திரங்கள் மற்றும் இதர சட்டப்பூர்வ ஆவணங்களைச் சரிபார்க்கத் தலைமை அலுவலகத்தில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தணிக்கைக்குப் பிறகே வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் எந்தவொரு வேட்பாளரும் இருந்துவிடக் கூடாது என்பதிலும், தேர்தல் களத்தில் சட்ட ரீதியான சிக்கல்கள் எழாமல் பார்த்துக் கொள்வதிலும் தவெக தலைமை அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, கட்சியின் சின்னம் மற்றும் வேட்பாளர்களின் அங்கீகாரம் தொடர்பான ஆவணங்களில் எந்தத் தவறும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த ரீ-செக் நடைபெறுகிறது. இதன் மூலம், களத்தில் இறங்கும் முன்பே தனது தேர்தல் வியூகத்தைச் சட்டரீதியாகவும் பலப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளார் என்பது தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
