வங்கதேசத்தின் தென்கிழக்கு மாவட்டமான கமில்லாவில் உள்ள பாதுவா பஜார் (Padua Bazar) ரயில்வே கிராசிங்கில், நேற்று (மார்ச் 22) அதிகாலை 3 மணி அளவில் ஒரு பயங்கர விபத்து நிகழ்ந்தது. சட்டோகிராமில் இருந்து டாக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டாக்கா மெயில்’ ரயில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பயணிகள் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்து உருக்குலைந்து, அதில் பயணம் செய்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தின் தீவிரம் எந்தளவுக்கு இருந்தது என்றால், பேருந்து ரயிலின் என்ஜினில் சிக்கிக்கொண்டது. ரயிலை உடனடியாக நிறுத்த முடியாததால், அந்தப் பேருந்தை தண்டவாளத்திலேயே சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் இழுத்துச் சென்றது.

இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கமில்லா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. ரயில்வே கேட் கீப்பர்களின் கவனக்குறைவு மற்றும் சிக்னல் குறைபாடே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பணியில் இருந்த இரண்டு கேட் கீப்பர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, என்ஜினில் சிக்கியிருந்த பேருந்தின் பாகங்கள் அகற்றப்பட்டு ரயில் போக்குவரத்து சீரானது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version