தமிழகத்தில் வரும் 4ம் தேதி நாளை மறுநாள் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காகத் தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முக்கிய சந்திப்புகள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் மத்திய ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்புப் படை மற்றும் உள்ளூர் போலீசார் எனப் பல்வேறு நிலைகளில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் தீவிர சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அடையாள அட்டை இன்றி எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், வெற்றி ஊர்வலங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் எல்லைப் பகுதிகள் மற்றும் பதற்றமானதாகக் கண்டறியப்பட்ட இடங்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்கள் மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .
