தமிழக அரசியல் களத்தில் மற்றுமொரு முக்கிய நகர்வாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நாதக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் 8.2% வாக்குகளைப் பெற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இம்முறை சட்டமன்றத்திற்குள் நுழையப் பலமான திட்டங்களை வகுத்துள்ளார்.

இதுவரை நடந்த இரு சட்டமன்றத் தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி களம் கண்டிருந்தாலும், ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை. இந்நிலையில், 2026 தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் மாநில மாநாட்டில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்திய சீமான், தான் காரைக்குடியில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி, 1.63 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்குள் அக்கட்சிக்குக் கணிசமான வாக்கு வங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சாதகமான அம்சத்தைக் கணக்கில் கொண்டே, சீமான் இம்முறை காரைக்குடியைத் தனது தேர்தல் களமாகத் தேர்ந்தெடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.

தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக நாம் தமிழர் கட்சி சட்டமன்றத்திற்குள் நுழையுமா என்பது அரசியல் நோக்கர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version