கூட்டத்தில் குண்டர்கள் உள்ளே புகுந்து கற்கள் செருப்புகளை வீசியதாகவும் தான் ஒரு நிரபராதி எனவும் புஸ்ஸி ஆனந்த் தனது முன் ஜாமின் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் 3ஆம் கட்ட பயணமாக கடந்த சனிக்கிழமை (செப். 27) அன்று நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

கரூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசு தரப்பில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், கரூர் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வந்தனர். இதற்கிடையில், மாவட்டச் செயலாளர் மதியழகனை நேற்று கைது செய்தனர்.

புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்ற முறையிலும் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதி பெற்ற நேரத்தில் பிரச்சாரத்தை தொடங்கவுமில்லை, முடிக்கவுமில்லை என்ற அடிப்படையில் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், புஸ்ஸி ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல் குமார் இருவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் கோர உள்ளனர். இந்த மனுக்களை இருவர் தரப்பிலும், அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், போலீசார் போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் தானும் கட்சியினர் மட்டுமே தான் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினோம் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

தவிர, கூட்டத்தில் குண்டர்கள் உள்ளே புகுந்து கற்கள் செருப்புகளை வீசியதாகவும், கூட்டத்தின் நடுவில் ஆம்புலன்ஸ் தேவையில்லாமல் வரவழைக்கப்பட்டது என்றும் எதிர்பாராமல் அதிகம் கூட்டம் வந்தது நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், போலீசார் பணியை முறையாக செய்யவில்லை என்றும் தான் நிரபராதி என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். நாளையும், நாளை மறுநாளும் நீதிமன்றம் விடுமுறை என்பதால் இந்த மனுக்கல் வெள்ளிக்கிழமை விசாரணை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version