மேற்காசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. போர் நிறுத்தம் மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் காரணமாக தற்போது இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு சீராகி வருகிறது. இந்த நிலையில் சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒர் அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது.
தென் மண்டல எல்.பி.ஜி சிலிண்டர் லாரி உரிமையாளர்களுக்கு ஐ.ஓ.சி நிறுவனம் ரூ.50 கோடி அளவுக்கு வாடகை பாக்கி வைத்துள்ளது. நீண்ட காலமாக இந்த பாக்கியை வழங்க கோரி லாரி உரிமையாளர்களர் வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஐ.ஓ.சி நிறுவனம் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வில்லை.
இதனை தொடர்ந்து நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை தராவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஐ.ஓ.சி நிறுவன உயர் அதிகாரிகளுக்கு தென் மண்டல எல்.பி.ஜி சிலிண்டர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தகவல் அளிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை முதல் எல்.பி.ஜி எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஐ.ஓ.சி. நிறுவனத்திற்கு இயக்கப்படும் 1,000-க்கும் மேற்பட்ட எல்.பி.ஜி. எரிவாயு டேங்கர் லாரிகள் லோடு ஏற்றாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக தென் மாநிலங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தென் மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கமானது நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கியது . இந்த சங்கத்தில் சுமார் 4,500 கியாஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவைகள் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு 5 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.
