புதுச்சேரியில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான நிகழ்வில் கைது செய்யப்பட்டவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2024 மார்ச் மாதம் முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் கால்வாயில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த கருணாஸ் (19) என்ற இளைஞரையும் விவேகானந்தன் (57) என்பவரையும் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து கால்வாயில் வீசியது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, விவேகானந்தன் சிறையில் உள்ள கழிப்பறையில் தனது துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தொடர்ந்து, புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கருணாஸ், குற்றவாளி என நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார். இவருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 5-ந்தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
