கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை விற்பனை செய்து வரும் ராஜா என்பவர், தென்காசி மாவட்டம், கடையநல்லுார் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், த லீட் பேக்டரி என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான அப்துல் ஜலீல் உடன் வர்த்தக பரிவர்த்தனை செய்து வந்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில், கொடுத்த 85 லட்சம் ரூபாயை திருப்பி கேட்டபோது, பணத்தைத் திருப்பி தரமறுத்து, மிரட்டல் விடுத்ததாக, ஜலீல் மீது சென்னை திருமங்கலம் போலீசில் 2024ம் ஆண்டு ராஜா புகாரளித்தார்.
எழும்பூர் நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகு, கடந்த ஆண்டு அப்துல் ஜலீலுக்கு எதிராக மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் நிபந்தனைகளை மீறிய ஜலீலை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம், காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், திருமங்கலம் போலீசார் முறையாக விசாரணை நடத்துவார்கள் என நம்பிக்கை இல்லை எனக் கூறி, வழக்கை சிபிசிஐடி அல்லது சுதந்திரமான புலன் விசாரணை அமைப்பின் விசாரணைக்கு மாற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜா மனுத்தாக்கல் செய்தார்.
மனுவில், கடையநல்லூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக போட்டியிடும் ஜலீல், அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால், காவல்துறையினர், அவருடன் கைகோர்த்து செயல்படுகின்றனர் எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையர், அண்ணாநகர் உதவி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கினை ஜூன் 3ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
