டெல்லியில் வரும் 20ம் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக கரப்பான் பூச்சி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
அண்மையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு முறைகேடு பிரச்சனைகளை முன்னிறுத்தி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி கடந்த ஜூன் 6ம் தேதி டெல்லி, புனே, பெங்களூரு என நாட்டின் பல்வேறு நகரங்களில் கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், லடாக்கை சேர்ந்த ஆர்வலர் சோனம் வாங்சுக் உள்ளிட்டோர் பங்கேற்று ஆதரவை தெரிவித்தனர்.
இந்தநிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி வரும் 20ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்த உள்ளதாக கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்துள்ளார்.
சமூகப் பிரச்சனைகளை முன்னிறுத்தி கரப்பான் பூச்சி மக்கள் கட்சியினர் போராட்டங்களை துவங்கி உள்ளனர். சமூக வலைதளங்களில் குரல் எழுப்பியவர்கள் தற்போது போராட்டக் களத்தில் இறங்கி உள்ளனர். இந்தநிலையில், நாடு முழுவதும் இளைஞர்களின் ஆதரவு பெற்று கரப்பான் பூச்சி மக்கள் கட்சி பெரிய இயக்கமாக வளர்ந்து வருகிறது.
