இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழரான ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.
தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதி முடிவடையும் நிலையில், புதிய தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த சேவையாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி, தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம் (NDA) மற்றும் இந்திய ராணுவ கல்விக்கழகத்தில் (IMA) இளநிலைப் பட்டம் பெற்றுள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்.பில் பட்டம் பெற்றதோடு, டெல்லி மற்றும் லண்டனிலும் உயர்கல்வி பயின்றிருக்கிறார்.
டெல்லி தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் (NDC) முன்னாள் மாணவரான ராஜா சுப்ரமணி 1985 டிசம்பரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாகத் தனது ராணுவப் பயணத்தைத் தொடங்கி, ராணுவத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளைத் திறம்பட வகித்திருக்கிறார்.
மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும், ராணுவத் தலைமைத் துணைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ள இவர், தற்போது, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகத் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். தனது பணிக்காக பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார்.
