ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில், மிக வீரியமிக்க ‘எபோலா’ வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தத் தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
காங்கோ நாட்டின் இதூரி (Ituri) மாகாணத்தில் இந்த எபோலா நோயின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளது. வழக்கமான எபோலா வைரஸை விட, இது ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo virus) எனப்படும் மிகவும் அரிய வகை எபோலா வைரஸ் தொற்று என்பதை அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபரின் இரத்தம், உமிழ்நீர், வியர்வை, சிறுநீர், வாந்தி அல்லது விந்து போன்ற உடல் திரவங்கள் (Body fluids) நேரடியாக மற்றொரு மனிதரின் உடலில் படுவதன் மூலமாகவே இந்தத் கொடிய தொற்று மிக வேகமாகப் பரவுகிறது.
இதூரி மாகாணத்தில் இந்த நோயின் பரவல் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதால், காங்கோவின் அண்டை நாடுகளான உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய தேசங்களுக்கும் இந்தத் தொற்று எளிதாகப் பரவிவிடக்கூடும் என்ற அச்சம் தற்பொழுது உலக சுகாதார நிபுணர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதன் காரணமாக, எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், சர்வதேச மருத்துவக் குழுக்களின் உதவியுடன் தொற்றைக் கட்டுப்படுத்தவும் காங்கோ அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
