திமுக முன்னாள் எம்.எல்.ஏவான டாக்டர் எழிலன் நாகநாதன், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திரைப்பட நகைச்சுவைக் காட்சி ஒன்று திமுகவுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவில் முதலமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பேருந்து பயணம் என பெண்களுக்கும், மாணவ மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் முதல் நான் முதல்வன் திட்டம், இலவச மடிக்கணினி என பல்வேறு திட்டங்களையும், மேலும் எண்ணற்ற நலத்திட்டங்களையும் செயல்படுத்தியது திமுகவின் திராவிட மாடல் அரசு.
மக்களுக்கான ஆட்சி நடத்துவதாகப் பெருமை கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினை எம்.எல்.ஏவாகவும், அதன் பின்னர் அமைச்சராகவும், தொடர்ந்து துணை முதலமைச்சராகவும் ஆக்கினார்.
இதனால் திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கான ஒரு இளைஞர் பட்டாளம் உருவாகியதோடு, அது திமுகவின் சீனியர்களிடமிருந்து தனித்தே செயல்பட்டு வருவதாகவும் கூறுகிறார்கள் திமுகவின் உள்விவகாரம் அறிந்தவர்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியும் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கிய திமுக கூட்டணி, 73 இடங்களை மட்டுமே பெற்றது. இதில் திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதிலும் திமுக தலைவரான மு.க.ஸ்டாலினே, தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
இதனைத் தொடர்ந்து தோல்விக்கான காரணத்தை ஆராய 36 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் சென்று இந்த குழு கட்சியினரைச் சந்தித்து தகவல் திரட்டி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி திமுக தோல்விக்கான காரணங்களை கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பதிவிடும் வகையில் இணையப்பக்கம் ஒன்றும் திமுக தரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயம் தொண்டர்களுக்கு எட்டாக்கனியாகி உள்ளது, திமுக சீனியர்களின் பண்ணையார் மனப்பான்மை, குடும்ப அரசியல், மருமகன் சபரீசன் ஆதிக்கம், கனிமொழி போன்றவர்களை கண்டுகொள்ளாதது, அடிமட்ட தொண்டர்களின் குரல்கள் எடுபடாமல் போனது, பல ஆண்டுகளாக ஒருவரே எம்.எல்.ஏவாக இருப்பது, மாவட்டச் செயலாளராக இருப்பது என பல்வேறு கருத்துக்களும் இந்த இணையப்பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும், திமுக நிர்வாகியுமான டாக்டர் எழிலன் நாகநாதன் தனது எக்ஸ்தளப் பக்கத்தில், பாடத்திட்ட மாற்றம், படிநிலை 1 எனப் பதிவிட்டு, சினிமா வீடியோ ஒன்றியை பதிவேற்றியுள்ளார்.
அந்த வீடியோவில் நடிகர் சந்தானம் 67 வயது முதியவரைப் பார்த்து இன்னும் இந்த சீட்டை உட்கார்ந்து தேய்ச்சுக்கிட்டு இருக்க, இந்த நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோர் யாரும் இருக்ககூடாது எனக் கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதுதான் இப்போது திமுகவுக்குள் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவில் மிக மூத்த சீனியர்கள் எல்லாம் வெளியேறி இளைஞர்களுக்கு வழிவிடாமல் இருப்பதைத்தான் எழிலன் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்போதைய இளைஞர்களின் நடவடிக்கைகளை சீனியர்களால் சரியாக கணிக்க முடியாததோடு, அவர்கள் போக்கில் செல்லமுடியாமலும் தவிக்கின்றனர். இதனால்தான் தவெக இளைஞர்கள் குறித்து சரியாக கணிக்காமல் தோல்வியை தழுவியதாகவும் எழிலன் குறிப்பிட்டிருப்பார் எனக் கருதப்படுகிறது.
டாக்டர் எழிலன் கருத்துக்கு பின்னூட்டம் இட்டுள்ள பலரும் திமுகவில் நடப்பதையே எழிலன் கூறியிருப்பதாகவும், மு.க.ஸ்டாலிம் சீனியர்தானே அவரையும் வெளியேறச் சொல்கிறீர்களா எனவும் கேள்வியை எழுப்பியுள்ளனர்.
அதே நேரம், டாக்டர் எழிலன் நாகநாதனின் பதிவுக்குப் பின்னணியில், திமுக தலைவர் மாற்றம் இருக்கலாம் எனவும் காதை கடிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.
உதயநிதி ஸ்டாலினை கட்சிக்குள் முன்னிறுத்தும் போதெல்லாம், எங்கேயே ஒரு மாவட்டக் கழகத்தில் நடக்கும் கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும். அது ஊடகங்கள் மூலம் பரவும்போது, ஒவ்வொரு மாவட்டக் கழகமாக அதே தீர்மானத்தை நிறைவேற்றுவார்கள். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகும் வரை இதே யுத்தி திமுகவில் கடைப்பிடிக்கப்பட்டது.
தற்போது மு.க.ஸ்டாலின் தோல்வியைத் தழுவி சட்டமன்றத்திற்குள் செல்ல முடியாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இப்போதே அவரை திமுகவின் தலைவராகவும் மாற்றிவிடும் திட்டம் இருப்பதாகவும், அதன் பின்னணிதான் எழிலன் நாகநாதனின் பதிவு என்றும் கூறப்படுகிறது.
– –மு.செய்யது
