சென்னையில் ‘கிளாண்டர்ஸ்’ (Glanders) எனப்படும் ஆபத்தான பாக்டீரியா தொற்று பாதிப்பு காரணமாக குதிரை ஒன்று உயிரிழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் குதிரை சவாரிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக் கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் பரவி வரும் இந்த நோய் தொற்றின் எதிரொலியாக, மாநிலத்தின் முக்கியச் சுற்றுலாத் தலங்களான ஊட்டி, கொடைக்கானல் மற்றும் சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் அனைத்திலும் குதிரை சவாரிக்குக் தற்காலிகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குதிரைகளுக்குக் காய்ச்சல், தோல் புண், சுவாசக் குறைபாடு (மூச்சுத் திணறல்) போன்ற அறிகுறிகள் தென்பட்டால், கண்டிப்பாகச் சவாரி மேற்கொள்ளக் கூடாது எனவும் நோயுற்ற குதிரைகளை உடனடியாகப் பிற குதிரைகளிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்த வேண்டும் என்றும் குதிரைகள் வளர்க்கப்படும் லாயங்கள் மற்றும் அவற்றின் இருப்பிடங்களை லெய்சால் அல்லது கிருமிநாசினிகள் கொண்டு முறையாகத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று தலைமை செயலகத்தில் ‘கிளாண்டர்ஸ்’ தொற்று குறித்தும், அது மனிதர்களுக்குப் பரவாமல் தடுப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
