தேர்தல் தோல்விக்குப் பின்பாக நாளை நடைபெறும் திமுக இளைஞரணி கூட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக இளைஞரணி மாவட்ட _ மாநில _ மாநகர அமைப்பாளர் துணை அமைப்பாளர் ஆலோசனைக்கூட்டம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.
ஜூன் மூன்றாம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது தொடர்பாகவும் , அதேபோல திமுக இளைஞரணி மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
அண்மையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தினை கூட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதில் பேசுகையில், திமுகவின் தேர்தல் தோல்வியைச் சுட்டிக்காட்டி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான் எனப் பேசினார்.
திமுக ஆட்சி அமைக்கவில்லையே தவிர, திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் ஆட்சி அமைந்திருப்பதாகக் கூறியவர், கழகத்தின் தலைவர் என்ற முறையில, இந்தத் தோல்விக்கு தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறியதோடு, தோல்விக்கான காரணம் குறித்து ஆராய குழுவையும் அமைத்தார்.

அதுமட்டுமின்றி திமுகவின் பிரச்சார யுத்தியை இன்றைய தலைமுறைகளுக்கு ஏற்றபடி, மாற்றவேண்டும். டீக்கடை அரசியல் டூ சோஷியல் மீடியா அரசியலாக நாம் மாறவேண்டும் எனவலியுறுத்தினார்.
இந்த நிலையில நாளை நடக்க இருக்கும் இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில், பிரச்சாரயுக்தியை மாற்றுவது தொடர்பாக மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தேர்தல்களாகவே திமுகவில் இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக, கட்சியின் அடிமட்ட அளவில் உழைக்கும் இளைஞரணி நிர்வாகிகள், வரும் காலங்களில் தங்களுக்கு முக்கியப் பொறுப்புகளும், தேர்தல் வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என ஆவலோடு காத்திருக்கின்றனர்.
“கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த மூத்த நிர்வாகிகள் (சீனியர்கள்) இப்போது அடுத்த தலைமுறைக்கு வழிவிட வேண்டும். அப்போதுதான் கட்சி புதிய ரத்தத்தோடு, கூடுதல் வேகத்துடன் செயல்பட முடியும்” என்பது இளைஞரணியினரின் பரவலான கருத்தாக உள்ளது.
கட்சிக்குள் இருக்கும் சீனியர்கள் இளைஞர்களுக்கு வழிவிடாமல் தடுப்பதோடு, தங்களது குடும்பத்தினரையே அடுத்தடுத்து அதிகார மையமாக்கி வருவதால், களமிறங்கி வேலை செய்யும் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்காமல் தடுக்கப்படுவது குறித்தும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இளைஞரணியினர் அதிரடியாக கருத்து தெரிவிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தோல்வியில் இருந்து திமுக பீனிக்ஸ் பறவை போல் எழும் என நம்பிக்கை தெரிவிக்கும் இளைஞரணியினர் அதற்கான பாதையையும் திமுக தலைமை உருவாக்க வேண்டும் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.
எம்.செய்யது
