அதிமுகவில் எஸ்.பி.வேலுமணி அணிக்கு ஆதரவாக இருந்த அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா, இன்று சபாநாயகரை சந்தித்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன்பின்னர், அமைச்சர்கள் என்.ஆன்ந்த் மற்றும் செங்கோட்டையனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். மேலும் முதலமைச்சரையும் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு சென்ற இசக்கி சுப்பையா, அங்கு தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;-
அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததற்கு ஒரே காரணம் தொகுதி மக்களின் நலனுக்காகத்தான்.
கடந்த 5 ஆண்டாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக இருந்து தொகுதி மக்களுக்காக பெரிதாக ஒன்றும் செய்யமுடியவில்லை. தொகுதிக்கு தேவையான முக்கியமான 10 கோரிக்கைகளை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை.
ஆளும் கட்சியின் ஆதரவோடு செயல்பட்டால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். அந்த அடிப்படையில் முதலமைச்சர் விஜய்யையும், தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்தையும் பார்த்தேன். நிச்சயமாக எனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்கள். மக்கள் நலனுக்காகத்தான் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்துள்ளேன். எனது மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளும் இன்று தவெகவில் இணைந்துள்ளார்கள். வேறு எந்த காரணங்களும் கிடையாது.
கடந்த 15 நாட்களில் முதலமைச்சர் விஜய் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார்.
மீண்டும் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவது என்பது தவெக தலைவரும் பொதுச்செயலாளரும் சேர்ந்து முடிவு செய்வார்கள். நான் நின்று எனது தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய முடியாத நிலையில் வேறு யாராவது வெற்றி பெற்று நல்லது செய்யவேண்டும் என்பதுதான் எனது எண்ணம். தேர்தல் பரப்புரையிலேயே இரட்டை இலைக்கு வாக்களிக்க கேட்கவில்லை. போட்டியிடும் வேட்பாளர்களில் யார் நல்லவரோ அவருக்கு வாக்களியுங்கள் என்றுதான் மக்களிடம் கேட்டேன். அப்படி நான் எனக்காக வாக்கு கேட்டதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயாராக இருக்கிறேன். நான் அரசியல் செய்வதே பொதுச் சேவைக்காகத்தான்.
நான் இதுவரை எந்தவித கையூட்டும் பெறவில்லை, இனிமேலும் பெறமாட்டேன் இப்படி ஒருசத்தியம் செய்துதான் நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
1984 முதல் அதிமுகவில் இருக்கிறேன். 2011இல் தான் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டேன். அம்மா என்னும் சகாப்தம் வேறு, இன்று இருக்கும் சகாப்தம் வேறு. யாரையும் குறை சொல்வது எனக்கும் அழகல்ல, நான் இருந்த இடத்துக்கும் அழகல்ல.
முதலமைச்சருடன் எனது வைப்ரேஷன் ஒத்துப் போகிறது. அம்பாசமுத்திரம் தொகுதியில் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நான் நிற்பேன். வேறு யாருக்கும் வாய்ப்பு வழங்கினால் அவரது வெற்றிக்காகப் பாடுபடுவேன்.
நான் மாறி வந்திருப்பது குறித்து விமர்சிப்பது ஆடு நனையுதே என்று ஓநாய் வருத்தப்படுவது போலத்தான். அவரவர் கதையை அவரவர் பார்த்துக் கொள்ளட்டும். குதிரையே தெரியாதவனிடம் போய் குதிரைப் பேரம் குறித்து கேட்டால் எப்படி பதில் சொல்வது?
குதிரைப் பேரம் ஏற்கனவே நடத்தியவர்களுக்குத்தான் குதிரைப் பேரம் குறித்து தெரியும்.
இவ்வாறு இசக்கி சுப்பையா தெரிவித்தார்.
குதிரைன்னா என்ன? பேரம்னா என்ன? – தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா கேள்வி?
Related Posts
Add A Comment
