பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி விலைகள் நாடு முழுவதும் மீண்டும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.33 காசுகள் உயர்ந்து ரூ.108.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 0.32 காசுகள் அதிகரித்து ரூ.99.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.3.50 அதிரடியாக உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு கடந்த மே 15-ம் தேதி, பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களில் மட்டும் மொத்தம் 4 முறை எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த 15 நாட்களிலேயே பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.7.50 வரை உயர்ந்துள்ளது. இது வாகன ஓட்டிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் சர்வதேச விலைக்கு ஏற்ப விலையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்திருப்பதும், இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்திருப்பதும் இறக்குமதி செலவை பல மடங்கு உயர்த்தியுள்ளன. அரசு எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு பெரும் இழப்பைச் சந்தித்து வருவதால், அந்தச் சுமையை ஈடுகட்டவே தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு வருகிறது.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீதான தொடங்கிய போர் சூழல், உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ‘ஹோர்முஸ் நீரிணை’ (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அண்மையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் செய்திகள், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய சூழலில் விலை உயர்வு தொடர்வது பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
