மூத்த மகள் அவந்திகாவின் திருமண அழைப்பிதழை மணமக்களுடன் சென்று பிரதமர் மோடிக்கு, குஷ்பு, சுந்தர் சி தம்பதி வழங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாகவும், தற்போது பாஜகவின் முக்கிய முகமாகவும் அறியப்படுபவர் குஷ்பு. இவரது கணவர் சுந்தர் சியும் தமிழ்திரைப்பட இயக்குநராகவும், நடிகராவும் இருந்தவர், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் புதிய நீதிகட்சி சார்பில் மதுரை மத்தி தொகுதியில் போட்டியிட்டார்.
இந்த நட்சத்திர தம்பதிக்கு, அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும், சிறு வயது முதலே உடல் புஷ்டியாக இருந்து வந்த நிலையில், சமீப காலமாக டயட் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, தங்களின் உடல் எடையை பாதிக்கும் மேலாக குறைத்துவிட்டனர். குஷ்புவும் தனது உடல் எடையைக் குறைத்து மெலிந்த தேகத்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனால் தமிழ் சினிமா உலகமே இவர்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு நிற்கிறது.
மூத்த மகள் அவந்திகா மலையாளத்தில் ‘ஆரம்பம்‘ என்ற திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இளைய மகள் அனந்திதா திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தவர், தங்களது சொந்த நிறுவனம் தயாரிக்கும் டபுள் ஆக்குபென்சி திரைப்படத்தின் மூலம் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக மாறியிருக்கிறார்.
இந்த நிலையில் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவுக்கும், ஷ்ரவன் சீனிவாசன் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விரைவில் அவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சென்று குஷ்பு – சுந்தர் சி தம்பதி வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்களை இன்று டெல்லியில் சந்திக்கும் பெருமை எங்களுக்குக் கிடைத்தது. எனது கணவர் சுந்தர் சி மற்றும் நான் இணைந்து, எங்கள் மகளின் வரவிருக்கும் திருமணத்திற்கான அழைப்பிதழை ஷ்ரவன் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து வழங்கினோம்.
பிரதமர் அவர்கள் மணமக்களை அன்போடு வாழ்த்தினார், தனது பிஸியான கால அட்டவணைக்கு மத்தியிலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கியதற்கு அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம், பெருமிதம் கொள்கிறோம். நன்றி பிரதம மந்திரி ஜி எனத் தெரிவித்துள்ளார்.
