சமீபத்தில் வெளியாகி இளைஞர்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற மலையாளத் திரைப்படம் ‘பிரேமலு’. இத்திரைப்படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் (Premalu 2) உருவாக்கப்படும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்நிலையில், ‘பிரேமலு 2’ திரைப்படம் கைவிடப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து படத்தின் நாயகன் நடிகர் நஸ்லென் கூறும்போது, “இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதும் போது சில சிக்கல்கள் மற்றும் சவால்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக ‘பிரேமலு 2’ தற்போதைக்கு கைவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக வெளியான ‘பிரேமலு’, வெறும் ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, உலகம் முழுவதும் சுமார் ரூ.136 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் உருவான இப்படத்தில் நஸ்லென், மமிதா பைஜு, ஷியாம் மோகன், சங்கீத் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முதல் பாகம் தந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் கதைக்களம் மிகச் சிறப்பாக அமைய வேண்டும் என்பதில் படக்குழுவினர் உறுதியாக இருந்த நிலையில், இந்தத் திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
