ஐபிஎல் வரலாற்றில் ‘ஈ சாலா கப் நம்தே’ என்ற ரசிகர்களின் நீண்ட கால ஏக்கம் கடந்த ஆண்டு ஆர்சிபி அணிக்கு நிறைவேறியது. ஆனால் இந்த முறையும் நனவாகுமா என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக, கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் தொடரும் ஒரு சுவாரசியமான புள்ளிவிவர ட்ரெண்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதாவது, ஐபிஎல் தொடரில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ‘பிளே-ஆஃப்ஸ்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பிளே-ஆஃப்ஸ் அறிமுகமான பிறகு நடந்து முடிந்த 15 சீசன்களில், சுமார் 12 முறை குவாலிபையர் 1 போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்குச் சென்ற அணியே சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளது.
குறிப்பாக, கடந்த 8 சீசன்களாக இந்த ‘குவாலிபையர் 1’ சென்டிமென்ட் ஒரு முறை கூட மாறாமல் அப்படியே தொடர்ந்து வருகிறது. குவாலிபையர் 1-ல் வெல்லும் அணியே கோப்பையைத் தட்டிச்செல்கிறது.
இந்த ஆதிக்கம் செலுத்தும் புள்ளிவிவரங்களை முன்வைத்து, “இந்த முறை கோப்பை கன்பார்ம் ஆர்சிபிக்கு தான்!” என ஆர்சிபி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களைப் பறக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
கடந்த காலங்களில் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையைத் தவறவிட்ட ஆர்சிபி அணிக்கு, இந்த 8 ஆண்டு கால ‘லக்’ கை கொடுத்து, தங்களின் 2வது ஐபிஎல் கோப்பை கனவை நனவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
