இந்திய கடற்படையின் 27-வது புதிய தலைமைத் தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் (மே 31) ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதிவேகமாக மாறிவரும் பிராந்திய கடல்சார் பாதுகாப்புச் சூழல்களுக்கு மத்தியில் அவர் இந்த உயரிய பொறுப்பை ஏற்றுள்ளார். இதுவரை கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கிருஷ்ணா சுவாமிநாதன் புதிய தளபதியாகப் பொறுப்பேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 2028, டிசம்பர் 31 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், “இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்புச் சூழல் சவாலானதாகவும், சிக்கலானதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறி வருகிறது. நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதார நலன்களையும் காக்க இந்திய கடற்படை எப்போதும் விழிப்புடன் செயல்படும். கடற்படையின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் போர் திறனை உச்சக்கட்டத்தில் வைத்திருப்பதே எனது முதன்மையான முன்னுரிமை.” என தெரிவித்தார்.
மேலும், நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்தி இந்திய கடற்படையை மேலும் நவீனமயமாக்கவும், ‘சுயசார்பு இந்தியா’ (Atmanirbharata) திட்டத்தின் கீழ் உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் பாடுபடப்போவதாக அவர் உறுதியளித்தார்.
1987-ம் ஆண்டு ஜூலை 1 அன்று இந்திய கடற்படையில் இணைந்த இவர், தகவல் தொடர்பு மற்றும் மின்னணுப் போர்முறையில் நிபுணத்துவம் பெற்றவர். இதற்கு முன்னதாக மேற்கு மண்டல கடற்படை பிரிவின் தலைமைத் தளபதியாகவும், கடற்படையின் துணைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல், வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பலான ஐஎன்எஸ் மைசூர், ஐஎன்எஸ் குலிஷ் உள்ளிட்ட முக்கியப் போர்க்கப்பல்களை வழிநடத்திய பெருமை இவருக்கு உண்டு.
தேசியப் பாதுகாப்பு அகாதமி முன்னாள் மாணவரான அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன், சர்வதேச ஆய்வுகளில் முனைவர் (Ph.D) பட்டம் பெற்றவர். இவரது மிகச்சிறந்த சேவையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு ‘பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம்’ (PVSM), ‘அதி விஷிஷ்ட் சேவா பதக்கம்’ (AVSM) மற்றும் ‘விஷிஷ்ட் சேவா பதக்கம்’ (VSM) ஆகியவற்றை வழங்கி கௌரவித்துள்ளது.
