கடுமையாக வெப்பம் நிலவும் காலம் என்பதால் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது மாதாந்திர ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில், நாட்டின் தற்போதைய கடுமையான வெப்ப அலை சூழல் குறித்து கவலை தெரிவித்தார்.
நாட்டின் பல பகுதிகளில் கோடை வெயில் சதமடித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் உக்கிரமாக உள்ளது. பலத்த வெயிலும், அனல் காற்றும் வீசி வருவதால், இந்தத் தருணத்தில் மக்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன், அரசுத் துறைகள் வழங்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.
மக்கள் எப்போதும் உடலை நீர்ச்சத்துடன் (Hydrated) வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய பிரதமர், நமது பாரம்பரிய கோடைகால பானங்களான ஆம் பன்னா, லஸ்ஸி, மோர், சத்து ஷர்பத், கோகம் ஷர்பத் மற்றும் சோல் கடி போன்றவற்றை அருந்துமாறு பரிந்துரைத்தார். இவை தலைமுறை தலைமுறையாகப் பழகி வந்த உள்ளூர் பாரம்பரியத்தின் நன்மைகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோடை காலத்தின் அரசனான மாம்பழங்கள் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் மல்கோவா, ஆந்திராவின் பங்கனபள்ளி மற்றும் தோத்தாபுரி, மகாராஷ்டிராவின் அல்போன்சா, குஜராத்தின் கேசர், உத்தரப்பிரதேசத்தின் தசரஹரி போன்ற பல்வேறு மாநிலங்களின் மாம்பழ ரகங்களையும் அதன் உலகளாவிய சந்தை வாய்ப்புகளையும் சுட்டிக்காட்டினார்.
