நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
ஒப்பற்ற தன் திரையோவியங்களால் திரையரங்குகளின் வெள்ளை திரைகளில், விழிகளில் என்றும் உலவக்கூடிய காவியங்களை, காலதேச வரையறைகளை எல்லாம் தாண்டி எக்காலமும் வாழக்கூடிய ஆவணங்களாக படைத்தளித்த தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன்!
பதினாறு வயதினிலே, மண் வாசனை, கிழக்கே போகும் ரயில், கருத்தம்மா, அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட எண்ணற்ற மண் மணம் மாறாத கலைப்படைப்புகளால் தமிழர் வாழ்வை, தமிழர் நிலத்தை, தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கவிதையாகப் படம்பிடித்த தமிழினத்தின் ஈடு இணையற்ற பெருமை, என்னுயிர் அப்பா இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
திரைக்கலையின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் எனக்கு கற்பித்த பேராசான்; பெற்ற மகனைப்போல என் மீது பெரும் பாசம் காட்டிய அப்பா பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக திரைக்கலை பயின்ற நாட்கள் ஒவ்வொன்றும் என் வாழ்வின் பொன்னாட்களாகும். பெரும்புகழ் பெற்ற ஏராளமான திரைக்கலைஞர்களை தமிழ்த்திரைக்கு தந்து வாழ்வளித்த மகாகலைஞனின் மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

திரைத்துறை மட்டுமின்றி என்னுடைய அரசியல் பயணம் வெற்றியடையவும் நாம் தமிழர் கட்சியின் மேடையேறி வாழ்த்திய பெருந்தகையின் மறைவு தனிப்பட்ட முறையில் என்னுள்ளத்தை மிகவும் பாதித்துள்ளது. இப்பெருந்துயரிலிருந்து மீள முடியாமல், என்னை நானே தேற்றிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றேன்!
அப்பா பாரதிராஜாவை இழந்து பெருந்துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், உலகெங்கும் பரவிவாழும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.
