புதுடெல்லியில், குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், 11-வது ஆட்சிமன்றக் கூட்டத்தை கூட்டியமைக்காக பிரதமருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறவும், அனைத்துத் தரப்பு உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அமைந்திட செயல்படுத்தப்படும் திட்டங்களை முழு மனதோடு வரவேற்பதாகவும்,
அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள், கூட்டுறவுக் கூட்டாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாக மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று தமிழ்நாடு உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளளதாகவும் தெரிவித்தார்.

வெளிப்படையான நிர்வாகம், சமூக நீதி. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமச்சீரான முன்னேற்றம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளை முன்னிறுத்தி, தமிழ்நாட்டு மக்கள் தங்கள் அரசுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளதாகக் கூறிய முதலமைச்சர், அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டின் நலன்களையும் மக்களின் விருப்பங்களையும் உறுதியாகப் பாதுகாக்கும் வேளையில், ஒன்றிய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
உலகளாவிய அளவில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல்களுக்கு இடையிலும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் தமிழ்நாடு, தனது உறுதித்தன்மையையும் தொடர்ச்சியான வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறது எனக் கூறியவர்,
பல்வேறு துறைகளை உள்ளடக்கிய வலுவான பொருளாதார அமைப்பு மற்றும் நமது தொழிலாளர்களின் உற்பத்தித் திறனைப் பிரதிபலிக்கும் வகையிலும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலும், 2036-ஆம் ஆண்டிற்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதற்கு தமிழ்நாடு பணியாற்றி வருவதாகக் தெரிவித்தார்.

இந்தத் தொலைநோக்குப் பார்வை இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகள் என்ற நான்கு முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றில் தமிழ்நாட்டின் முன்னுரிமைகள் நெருக்கமாக ஒவ்வொன்றுடனும் இணைந்துள்ளதாகக் கூறிய முதலமைச்சர், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் பயணத்திற்கும் இன்றியமையாத சில முக்கிய முன்னுரிமைகளை ஆட்சிமன்றத்தின் முன் எடுத்துரைத்தார்.
இந்தியாவின் மிகப்பெரிய வலிமை அதன் இளைய தலைமுறை மக்கள் தொகையாகும். இந்த இளைய தலைமுறை மக்கள்தொகைப் பலனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள. தமிழ்நாடு கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து முதலீடு செய்யும்.
இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு, ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பணியிடைப் பயிற்சிகள் (Internships) மற்றும் தொழில்துறையுடன் இணைந்த திறன் பயிற்சிகளை வழங்கும் “இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கத்தை” (Youth Skill and Employment Mission) செயல்படுத்த விழைவதாகக் கூறினார்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் திறன் மையங்களை அமைப்பதற்கும். செயற்கை நுண்ணறிவு, ஆழ்தொழில்நுட்பம் (Deep Technology). இணையப் பாதுகாப்பு, மேகக் கணினி தொழில்நுட்பம் (Cloud Computing), மின்சார வாகனத் தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி (Semiconductor) தொடர்புடைய துறைகளில் பயிற்சி அளிப்பதற்கும் ஒன்றிய அரசின் ஆதரவைக் கேட்டுக் கொண்டார்.
உலகத் தரத்திலான தொடக்க நிறுவன வளர்ப்பு மையங்களை அமைப்பதற்கும். ஆழ்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான துணிகர முதலீட்டு சூழலை உருவாக்குவதற்கும், பயன்பாட்டு ஆராய்ச்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கும் ஒன்றிய அரசின் ஆதரவைக் கேட்டுக் கொண்டார்.
அதேபோல், நமது மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு எதிர்ப்பதாகவும் தெரிவித்தவர்,
மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் (MBBS), பல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலைப் பட்டம் (BDS) மற்றும் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவப் (AYUSH) படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்குமாறு வலியுறுத்தினார்.
நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், “வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்” (Poverty-Free Tamil Nadu Mission) ஒன்றை தமிழ்நாடு அரசு முன்மொழிவதாகவும் அனைவருக்கும் வீடு என்ற கனவை நிறைவேற்றுவதற்காக ஒன்றிய அரசின் நிதி உதவியையும் நாடுவதாகவும் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டிற்கு இரண்டாவது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையை கோயம்புத்தூரில் அமைக்க அனுமதிக்குமாறும்
இதற்குத் தேவையான நிலத்தை மாநில அரசு வழங்கும் எனவும் உறுதி தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் என்பது பெண்களை மையப்படுத்தியே அமைந்துள்ளதாகவும் “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை” (Singappen Special Force) தொடங்கப்பட்டுள்ளதாகவும் , குறு, சிறு மற்றும் பிற விவசாயிகளை உள்ளடக்கிய வகையில் ரூ.2,045 கோடி மதிப்பிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தை தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்துள்ளதாகவும் எடுத்துரைத்தார்.
இலங்கை மற்றும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மீட்கவும் தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
அதேபோல், கடற்கரை நகரங்களில் நிரந்தர வெள்ளத்தடுப்புக் கட்டமைப்புகளை உருவாக்கவும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய உட்கட்டமைப்புகளை “காலநிலைத் தாங்குதன்மை பெருந்திட்டம் 2045” (Climate Resilient Master Plan 2045) கீழ் ஒன்றிய அரசின் மேம்பட்ட ஆதரவையும் தமிழ்நாடு நாடுவதாகவும் கூறினார்.
குலசேகரபட்டினத்தில் இந்திய விண்வெளித் துறை (IN-SPACE) உடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள விண்வெளி உற்பத்தி மையத்தை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்க வேண்டும்,
ஜி.எஸ்.டி. சாலையின் (NH-32) செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல்.
NH-81 திருச்சி (பஞ்சப்பூர்) – ஜீயபுரம் – கரூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக (Six Lane) மேம்படுத்துதல்.
NH-81 கரூர் – கோயம்புத்தூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக (Six Lane) மேம்படுத்துதல்.
NH-87 மாதவரம் – சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் (Elevated Corridor) அமைக்கவும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கவும் கேட்டுக் கொண்டார்.
ஒகேனக்கல் மூன்றாம் கட்டக் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான ரூ.2283.40 கோடி உறுதி அளிக்கப்பட்ட ஒன்றிய நிதியை உடனே வழங்கவும் வலியுறுத்தினார்.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3284 கோடி நிதியை எவ்வித நிபந்தனைகளும் இன்றியும், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தவோ அல்லது மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவோ வற்புறுத்தாமலும் விரைவாக விடுவிக்குமாறும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கேட்டுக் கொண்டார்.
நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களுக்கு தனித்துவமாக விளங்கும் தொன்மையான நூலான திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்தார்.
