தமிழகத்தில் விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தேனியில் விவசாயச் சங்கத்தினர் பல்வேறு நூதன முறைகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் சமயத்தில் விவசாயக் கடன்கள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் விவசாயிகளுக்கு மிகவும் குறைவான தொகையே தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்குத் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தேனியில் ஒரு நாள் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த வினோதமான போராட்டத்தின் தொடக்கமாக, தமிழக முதல்வருக்கு விவசாயச் சங்கத்தினர் கேக் வெட்டி விவசாயிகளுக்கு வழங்கினர். அதனைத் தொடர்ந்து, தலையில் துண்டு போட்டு, கைகளில் மண்சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், விசிலை ஊதிவிட்டு, பின்னர் அதனை அறுத்துச் சாலையில் எறிந்தும், தங்கள் உடலிலேயே சாட்டையால் அடித்துக் கொண்டும் நூதன முறையில் தங்களது வேதனையை வெளிப்படுத்தினர்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, 5 ஏக்கருக்குக் கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களை முழுமையாகவும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% கடன்களையும் தள்ளுபடி செய்வார்கள் என்ற நம்பிக்கையில்தான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விவசாயிகள் வாக்களித்தனர். ஆனால், தற்போதைய அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றும் செயலாக உள்ளது. எனவே, கடன்கள் முழுமையாக ரத்து செய்யப்படும் வரை தங்களது போராட்டங்கள் தொடரும்” என்று போராட்டக் குழுவினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
