சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூரில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியில், அமைச்சர் மற்றும் ஆட்சியரின் காலதாமதத்தால் பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை சார்பில், போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று காலை பெரம்பலூர் பாலக்கரையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் காலை 9.15 மணிக்கு பேரணியைத் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளி, விடுதி மாணவ-மாணவிகள் காலை 8.15 மணிக்கே வரவழைக்கப்பட்டு, சாலையில் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.
ஆனால், அறிவிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் பேரணி தொடங்கப்படவில்லை. வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு வந்த மாணவர்கள், சுட்டெரிக்கும் வெயிலிலும் புழுதியிலும் சுமார் 10.40 மணி வரை கால்கடுக்கக் காத்திருக்க வைக்கப்பட்டனர். பின்னர்தான், மாவட்ட ஆட்சியர் சரண்யாவுடன், கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால் தாமதம் ஏற்பட்டது என்ற விவரம் தெரியவந்தது.
இறுதியாக, காலை 10.45 மணியளவில் அமைச்சர் ராஜ்மோகன் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். பாலக்கரையில் தொடங்கிய பேரணி புதிய பேருந்து நிலையம் வரை சென்று திரும்பியதை அடுத்து, காலை 11 மணியளவிலேயே மாணவர்கள் தங்களின் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
