தமிழ்நாடு முழுவதும் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயது குழந்தைகள் வரை உள்ளவர்களுக்கு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் இன்று தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்,
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட டி எஸ் கே மகப்பேறு மருத்துவமனையில் மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக காலை 7 மணி முதல் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்த நிலையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் கமலி காலை 9 மணியளவில் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக காலை முதல் வந்திருந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்காமல் அமைச்சரின் வருகைக்காக காத்திருக்க வைக்கப்பட்டிருந்தனர். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன், துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோரூம் அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். 9.20 மணியளவில் அமைச்சர் வந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனால் காலை முதல் பச்சிளம் குழந்தைகளோடு வந்திருந்த தாய்மார்கள அதிருப்தி அடைந்தனர்.
