ராமநாதபுரம் எம்எஸ்கே நகர் பகுதியில். தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி காணாமல் போன நிலையில், பக்கத்து வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரையைச் சேர்ந்த பாலகணேஷ் – செல்வி தம்பதியினருக்கு சாய் தீப்தி மற்றும் சாரு நித்திகா என்ற ஐந்து வயது இரட்டைப் பெண் குழந்தைகள் உள்ளது.
சாய் தீப்தி மற்றும் சாரு நித்திகா இருவரும் ராமநாதபுரத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு விடுமுறை நாட்களில் தனது பெற்றோருடன் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு மதுரையில் இருந்து செல்வி தனது இரு மகள்களையும் வார விடுமுறையையொட்டி ராமநாதபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
ராமநாதபுரம் எம்எஸ்கே நகரில் உள்ள அவரது தாத்தா முத்து முருகன் வீட்டிற்கு வந்த சாரு நித்திகா, சாய் தீப்தி மற்றும் செல்வி ஆகியோர் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் வீட்டிற்குள் அதிகமாக புழுக்கமாக இருந்ததால் வீட்டின் முன் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கி உள்ளனர்.
காலை எழுந்து பார்த்தபோது சாய் தீப்தி காணாமல் போய் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் செல்வி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் சாய் தீப்தி கிடைக்காததால் ராமநாதபுரம் நகர் காவல் நிலைய போலீசருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எம்எஸ்கே நகர் ஒட்டி உள்ள அனைத்து பகுதிகளிலும் 5 வயது சிறுமியை தீவிரமாக தேடி வந்த நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள கிணற்றில் சிறுமி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அங்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்புத் துறையினர், கிணற்றுக்குள் கிடந்த சிறுமியின் உடலை மீட்டளித்தனர். பின்னர், உடற்கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியின் உடலை போலீசார் அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த சிறுமியின் உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுதது ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து அனைவரையும் கண்கலங்க செய்தது.
இதனிடையே தகவல் அறிந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜுவ், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் இருந்த சிறுமியின் உடலை நேரில் பார்வையிட்டதோடு, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
சிறுமி சடலமாக மீட்கப்பட்ட கிணறு உயரமாக இருப்பதால் சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ராமநாதபுரம் நகர் காவல்நிலைய போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து சிறுமி உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்த போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
