ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளைக் கண்காணித்துத் தடுக்கும் நோக்கில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் மாநில அளவிலான உயர்மட்டக் கண்காணிப்புக் குழுவை தமிழ்நாடு அரசு மறுசீரமைத்துள்ளது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்யவும் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன், திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா, காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில் மற்றும் அதிமுகவின் எம். தனபால் உள்ளிட்டோர் முக்கிய உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். மொத்தம் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 37 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 59 பேர் உறுப்பினர்களாக இந்த உயர்மட்டக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
அமைச்சர்கள் மரிய வில்சன், வன்னிஅரசு மற்றும் ராஜ்மோகன் ஆகியோரும் இக்குழுவில் முக்கியப் பொறுப்பு வகிக்கின்றனர். இக்குழு ஆண்டுக்கு இரண்டு முறை கூடி, வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அமலாக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
