ஹைதராபாத், சையதாபாத் பகுதியில் இயங்கி வரும் ‘சக்சஸ்’ என்ற தனியார் பள்ளியில், இரண்டாம் வகுப்பு பயிலும் ஆறு வயது இந்து மதத்தைச் சேர்ந்த சிறுவனின் வீட்டுப்பாட டைரியில், இஸ்லாமிய மத நம்பிக்கையின் அடிப்படைப் பாடங்களான ‘கல்மா 1 மற்றும் 2’ (Kalma) மற்றும் குர்ஆனின் முதல் அத்தியாயமான ‘பாத்திஹா’ (Fatiha) ஆகியவற்றை வாசிக்குமாறு எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்ட சிறுவனின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
சிறுவனின் உறவினர் ஒருவர் இது குறித்து கூறுகையில், “பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுவனின் டைரியைச் சரிபார்த்தபோது, இந்த மத வழிபாட்டுப் பாடங்கள் வீட்டுப்பாடமாகக் கொடுக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்தேன். ஒரு பள்ளியின் பொறுப்பு தரமான கல்வியை வழங்குவதுதானே தவிர, மதப் போதனைகளை திணிப்பது அல்ல,” என்று தெரிவித்துள்ளார். மேலும், முன்னதாகவே ஒருமுறை இதேபோன்ற குறிப்பு டைரியில் எழுதப்பட்டு, பின் அடிக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், இது ஏதோ தவறுதலாக நடந்ததாக தெரியவில்லை, திட்டமிட்டே செய்யப்படுவதாக உணர்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து பள்ளியின் முதல்வரிடம் விளக்கம் கேட்டபோது, முதலில் இது ஒரு மத நடைமுறை என்றும், அனைத்து மாணவர்களும் கட்டாயம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டதாக அந்த உறவினர் தெரிவித்தார். பின்னர், அது தவறுதலாக எழுதிவிட்டதாக ஆசிரியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முரண்பாடான விளக்கங்கள் தங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.
மற்ற மாணவர்களின் டைரிகளிலும் இதுபோன்ற குறிப்புகள் எழுதப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை இது விருப்பப்பாடம் என்றால், அந்தப் பாடத்தை எடுத்த மாணவர்களுக்கு தனியாகக் கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எந்தவித முன் ஆலோசனையும் இன்றி அனைவர் மீதும் திணிக்கப்படுகிறது,” என்று கவலை தெரிவித்த குடும்பத்தினர், இதை ஒருவிதமான ‘மறைமுக மூளைச்சலவை’ என்று விமர்சித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் கல்வித்துறை தலையிட்டு, சம்பந்தப்பட்ட பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவனின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
