ஈரோடு நகரில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கத்துடனும், பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஈரோடு தெற்கு போக்குவரத்து காவல்துறையினர் வித்தியாசமான முன்னெடுப்பைச் செய்துள்ளனர்.
வழக்கம்போல அபராதம் விதிப்பது அல்லது துண்டுப் பிரசுரங்களை வழங்குவதைத் தாண்டி, மக்களின் கவனத்தை உடனடியாக ஈர்க்கும் வகையில் காவல்துறை ஊழியர்களே மனித குரங்கு மற்றும் கரடி வேடங்களை அணிந்து பன்னீர்செல்வம் பூங்கா மற்றும் முக்கியப் போக்குவரத்து சந்திப்புகளில் இந்தப் பிரச்சாரத்தில் இறங்கினர்.
விலங்கு வேடங்களில் வந்தவர்கள் வாகன ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கியதால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்முடன் இதைக் கவனித்தனர். இதன் மூலம் காவல்துறையினர் சொல்ல வந்த விழிப்புணர்வுச் செய்திகள் பொதுமக்களை எளிதாகச் சென்றடைந்தன.
அதாவது, இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல், பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் பயணத்தின்போது தவறாமல் சீட் பெல்ட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தங்களது உயிரை மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.
இருசக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்வது வாகனத்தின் கட்டுப்பாட்டைக் குலைத்து விபத்துக்கு வழிவகுக்கும். சிக்னல்களை மதிப்பதாகவும், அதிக வேகத்தைத் தவிர்ப்பதாகவும், சாலைக் குறியீடுகளை முறையாகப் பின்பற்றுவதாகவும் அனைத்து விதிகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
விபத்தில்லா ஈரோட்டை உருவாக்குவதே எங்களது முதன்மையான நோக்கம்; போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது என்பது ஏதோ அபராதத்தில் இருந்து தப்புவதற்காக அல்ல, நமது குடும்பத்தினருக்காக நீண்ட காலம் வாழவே!” என்று காவல்துறையினர் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் வழியே பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
