மக்கள் திண்டாடி வரும் நிலையில் ஜனநாயகம் படம் பார்த்ததை செல்ஃபி எடுத்து அமைச்சர்கள் கொண்டாடி வருவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது பெண்ணின் கால் விரலை எலிகள் கடித்துக் குதறியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை இன்றைய ஆட்சி எப்படி வைத்திருக்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி என்று விமர்சித்துள்ளார்.
அரசை நம்பி சிகிச்சை பெற வந்து, எலி கடித்து கால் விரல் இழந்துள்ள அந்த பெண்ணிற்கு என்ன பதில் வைத்துள்ளது இன்றைய தவெக பொய்க்கால் குதிரை அரசு என ஆதங்கம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,
இப்படி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்க, இத்துறையின் அமைச்சரோ, ஜனநாயகன் படத்தின் முதல் காட்சி பார்த்து கொண்டாடி Selfie பதிவிட்டுக் கொண்டிருக்கிறார் எனச் சாடியுள்ளார்.
அவர் மட்டுமல்ல, இன்றைய தினம் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் படம் பார்க்க “லீவு” போட்டிருப்பதாக வேறு செய்திகள் வருவதாகவும் கூறியுள்ளார்.
நாடும் நாட்டு மக்களும் எக்கேடாய்ப் போனால் என்ன? என்று “Blastu Blastu” கொண்டாட்டத்தில் திளைக்கும் புதிய Nero அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,
உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதுடன், அவருக்கான இழப்பீடும் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார்.
